பாம்பு கடியால் ஏற்பட்ட காயம் |
கோவை
கெம்பட்டி காலனி தர்மராஜா கோயில் வீதியை சேர்ந்தவர் சினேக் முருகன் (53). 8 வயதில் இருந்தே அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பாம்புகளை
லாவகமாக பிடித்து வருகிறார். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோவை பூ
மார்க்கெட் காமராஜபுரத்தில் ஒரு வீட்டில் கருநாகம் ஒன்று புகுந்திருந்தது. அதை
பிடிக்க சென்றபோது அங்கு 10 அடி நீளமுள்ள
கருநாக பாம்பு சுவற்றோரம் படுத்திருந்தது. பாம்பின் கழுத்தை பிடித்து அமுக்கியவாறு
எழுந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது
பாம்பு அவரது இடது கையில் கடித்து விட்டது. உடனே கடிபட்ட இடத்திற்கு அருகில்
துணியை கட்டி விஷத்தை உறிஞ்ச கையை கீறி உள்ளார். பின்னர், அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பாம்பு கடித்த கை கறுப்பாக மாறி, மணிக்கட்டுக்கு
கீழே கை அழுகியது. சிகிச்சை அளித்த
டாக்டரை சந்தித்து கேட்டபோது, ‘தனியார்
மருத்துவமனையில் தான் இதற்கு சிகிச்சை பெற முடியும். அதற்கு 1 லட்சம் வரை செலவாகும்‘ என தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில்,
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள்
குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், கலெக்டரிடம்
சினேக் முருகன் மனு கொடுத்தார். அதில், இதுவரை
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை
பிடித்து பொதுமக்களை காப்பாற்றி சேவை புரிந்துள்ளேன். தற்போது எனக்கே இந்த கதி
ஆகிவிட்டது. பாம்பு கடித்த நிலையிலும் மூதாட்டியை காப்பாற்றினேன். தற்போது கை
அழுகி விட்டது. எனது சிகிச்சைக்கான தொகையை அரசு தந்து என்னை காப்பாற்ற வேண்டும் என
தெரிவித்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
அளித்தார்.
|
No comments:
Post a Comment